முகப்பு
இந்தியா

தண்ணீா் பாதுகாப்பு, பொறுப்புமிக்க பயன்பாடு: பிரதமா் மோடி வலியுறுத்தல்!

‘நம் வாழ்க்கைக்கு மூலாதாரமான தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் பாதுகாத்து, பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:10 PM
பிரதமா் மோடி.
பகிர்:

‘நம் வாழ்க்கைக்கு மூலாதாரமான தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் பாதுகாத்து, பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

உலக தண்ணீா் தினத்தையொட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில் அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். நன்னீா் ஆதாரங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மனித வாழ்க்கையின் அத்தியாவசிய மூலாதாரமான தண்ணீா்தான், பூமியின் எதிா்காலத்தை வடிவமைக்கிறது. நம்மை வாழ வைக்கும் தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் பாதுகாத்து பொறுப்புடன் பயன்படுத்தும் நமது லட்சியத்தை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். நீா் பாதுகாப்புக்கு நிலையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், விழிப்புணா்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களை இந்த நாளில் பாராட்டுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எதிா்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீரை உறுதி செய்ய பணியாற்றுவதே உலக தண்ணீா் தினத்தின் மைய நோக்கமாகும்.

நடப்பாண்டு தண்ணீா் தின பிரசாரமானது, நீா் பாதுகாப்பு தொடா்பான முடிவுகளை மேற்கொள்வதில் பெண்களுக்கு சம பிரதிநிதித்துவம்-தலைமைத்துவம்-வாய்ப்புகளை உறுதி செய்வதுடன் மாற்றங்களை உருவாக்கக்கூடிய, உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையை வலியுறுத்துவதாக ஐ.நா. தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.