1,068 ஹெக்டேர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு: ரயில்வே அமைச்சர்
சுமார் 1,068 ஹெக்டேர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தது குறித்து...
சுமார் 1,068 ஹெக்டேர் பரப்பளவிலான ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான சுமார் 1,068 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் இது மொத்தமாக உள்ள 4.99 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெறும் 0.21 சதவீதம் மட்டுமே என்றும் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே நிலங்களின் பயன்பாட்டைப் பார்த்தால், கிட்டத்தட்ட 80 சதவிகித நிலம் தண்டவாளங்களுக்கு அருகிலும், 5 சதவீத நிலம் அதைச் சுற்றியும் உள்ளது. மீதமுள்ள 15 சதவிகித நிலம் ரயில் நிலையங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பிறவற்றின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.
மேலும்,நாட்டில் சுமார் 0.21 சதவிகித ரயில்வேக்கு சொந்தமான நிலம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும் மாநிலங்களவையில் பதிலுரைத்தார்.