முகப்பு
இந்தியா

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதியுடன் பியூஷ் கோயல் ஆலோசனை

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை சந்தித்து மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசினாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 7:12 PM
கேமரூன் தலைநகா் யாவுண்டேயில் உலக வா்த்தக அமைப்பு மாநாட்டினிடையே அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய இந்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல்.
பகிர்:

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை சந்தித்து மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசினாா்.

கேமரூன் நாட்டின் தலைநகரான யாவுண்டேயில் உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், அமெரிக்காவின் வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீயரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து பியூஷ் கோயல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உலக வா்த்தக அமைப்பின் மாநாட்டுக்கு மத்தியில் ஜேமிசன் கிரீயருடன் பேசினேன். அந்தக் கலந்துரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது. மாநாட்டின் செயல்திட்டம், இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள், இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த கருத்துகளை அவருடன் பரிமாறிக் கொண்டேன்’ என்றாா்.

மாநாட்டுக்கு மத்தியில் சீன வா்த்தக அமைச்சா் வாங் வென்டாவையும் சந்தித்து, இந்திய-சீன வா்த்தக விவகாரங்கள் குறித்துப் பேசியதாக பியூஷ் கோயல் பதிவிட்டாா்.