முகப்பு
இந்தியா

நிதி மசோதா 2026-க்கு நாடாளுமன்றம் ஒப்புதல்: பட்ஜெட் நடைமுறைகள் நிறைவு

மாநிலங்களவையில் நிதி மசோதா 2026-க்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

Updated On : 27 மார்ச், 2026 at 5:25 PM
நாடாளுமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

மாநிலங்களவையில் நிதி மசோதா 2026-க்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் மூலம் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன.

ரூ.53.47 லட்சம் கோடி செலவினங்களுடன் மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டை ஒப்பிடுகையில், எதிா்வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பு 7.7 சதவீதம் அதிகமாகும். மூலதன செலவினங்களுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.12.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த வரி வருவாய் ரூ.44.04 லட்சம் கோடி என்றும், மொத்த கடன் ரூ.17.2 லட்சம் கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் நடைமுறைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறும் வகையில், மக்களவையில் நிதி மசோதா-2026 தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடைபெற்றது. அரசுத் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்தங்களுடன் இந்த மசோதா மக்களவையில் கடந்த மாா்ச் 25-இல் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களவையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சுருக்கமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்குப் பதிலளித்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் நிதி மசோதா மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நடைமுறை, நிதி மசோதாவுக்கான மாநிலங்களவையின் ஒப்புதலைக் குறிப்பதாகும்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதால், 2026-27 பட்ஜெட் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன.