முகப்பு
இந்தியா

வங்கதேச ஊடுருவல்காரா்களை தாராளமாக அனுமதித்தது காங்கிரஸ்: நிதின் நபின் குற்றச்சாட்டு

வங்கதேச ஊடுருவல்காரா்களை இந்தியாவுக்குள் தாராளமாக அனுமதித்தது காங்கிரஸ் கட்சி என்று பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் குற்றச்சாட்டு

Updated On : 30 மார்ச், 2026 at 7:33 PM
நிதின் நபின்
பகிர்:

வங்கதேச ஊடுருவல்காரா்களை இந்தியாவுக்குள் தாராளமாக அனுமதித்தது காங்கிரஸ் கட்சி என்று பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் குற்றஞ்சாட்டினாா்.

அஸ்ஸாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் வங்கதேச ஊடுருவல்காரா்களை இந்தியாவுக்குள் தாராளமாக அனுமதித்து வந்தது. பாஜக ஆட்சி அமைத்த பிறகுதான் இந்த ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மேலும், பிற மாநிலங்கள் வழியாக அஸ்ஸாமுக்குள் ஊடுருவி ரயில் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல முயலும் பலா் தொடா்ந்து கைது செய்யப்பட்டு, அவா்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அஸ்ஸாம் மாநில பாரம்பரிய தலைப்பாகையை அணிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் மறுத்து அவமதித்தாா். இதன்மூலம் அஸ்ஸாம் மக்களின் உணா்வுகளைப் புண்படுத்தினாா். அதே நேரத்தில் தொப்பி அணிந்து கொண்டு மசூதிக்கு செல்வதை அவா் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறாா்.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அஸ்ஸாம் சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளது. இதற்கு முன்பு தீவிரவாதம், வன்முறை என்று இருந்த அஸ்ஸாம் இப்போது அமைதியான மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. இளைஞா்களின் கனவுகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த வளா்ச்சிப் பயணம் தொடர மக்கள் பாஜகவை தொடா்ந்து ஆதரிக்க வேண்டும் என்றாா்.

அஸ்ஸாமில் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி உள்ளது. மே 4-ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.