சுடுகாட்டில் பதுக்கப்பட்ட சிலிண்டர்கள்... ரூ. 6000 வரை விற்பனை!
தெலங்கானாவில் சுடுகாட்டில் பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட சிலிண்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தெலங்கானாவில் சுடுகாட்டில் பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட சிலிண்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தெலங்கானாவில் உள்ள ஜூபில் ஹில்ஸ் சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர் இணைந்து சட்டவிரோதமாக எல்பிஜி சிலிண்டர்களை விற்கும் கும்பலைக் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில், சுடுகாட்டில் சட்டவிரோதமாகப் 414 சிலிண்டர்களைப் பதுக்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்றதாகக் கூறி ஹெச்.பி. எரிவாயு ஏஜென்ஸி உரிமையாளர் உள்பட 10 பேரைக் கைது செய்தனர். வணிக சிலிண்டரின் சந்தை மதிப்பு ரூ.2000-ஆக இருக்கும் நிலையில் இவர்கள் ஒரு சிலிண்டரை ரூ.6,000 வரை விற்றுள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியான முகமது ஆமீர் (42) சாம்ஷாபாத் பகுதியில் ஹெச்.பி. எரிவாயு ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து ஒரு கோவில் தலைவர் உள்பட 10 இந்தச் செயலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி சிறப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி கெய்க்வாட் வைபவ் ரகுநாத் கூறுகையில், “குற்றவாளிகள் எரிவாயு சிலிண்டர்களை சுடுகாட்டில் பதுக்கி வைத்து அவற்றை அதிக விலைக்கு விற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த சுடுகாட்டில் சோதனை நடத்தியதில் 414 சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன. அதில் 47 கி முழு சிலிண்டர்கள் 30, 19 கி முழு சிலிண்டர்கள் 148, 19கி காலி சிலிண்டர்கள் 192, 5 கி முழு சிலிண்டர்கள் 35, 5 கி காலி சிலிண்டர்கள் 9 என 21.88 லட்சம் அளவிலான சிலிண்டர்களைக் கைப்பற்றியுள்ளோம்.
அதனுடன், 2 கனரக வாகனங்கள், 2 பொலெரோ கார்கள், 7 வணிக வாகனங்கள் உள்ளிட்ட 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி குடிமைப் பொருள் வழங்கல் துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
மேற்கு ஆசிய போரை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைச் சிலர் பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.