கோவை அருகே விற்பனைக்கு இருந்த 5,102 மதுபுட்டிகள் பறிமுதல்
தேர்தல் விதிமுறைகளை மீறி கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5,102 மதுபுட்டில்கள் பறிமுதல் குறித்து...
தேர்தல் விதிமுறைகளை மீறி கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5,102 மதுபுட்டில்களை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடக்கிறது. தோ்தலையொட்டி 21 ஆம் தேதி முதல் தேர்தல் நாளான 23 ஆம் தேதி வரை டாஸ்மாக் மற்றும் மதுபான பார்களில் மதுபானங்கள் விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், அன்னூர் பகுதியில் மதுபுட்டில்கள் பதுக்கி வைத்திருந்து கள்ளச் சந்தையில் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Advertisement
இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அன்னூர் அருகே கரியாம்பாளையத்திலிருந்து - பிள்ளைப்பம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் குடோனில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 5,102 மது புட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மது மதுபுட்டில்களை பதுக்கி வைத்திருந்த காளிமுத்து (48), வீரமணி (35), குமார் (44) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விற்பனைக்கு பயன்படுத்திய அவர்களது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று அன்னூர் அடுத்துள்ள காரனூர் பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த சரவணக்குமார் (39) கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 56 மது மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனர்.