முகப்பு
இந்தியா

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை

உலக அளவில் முன்னணி கல்வி நிறுவனமான நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாகும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 ஏப்ரல் 2026, 1:51 am IST
- IANS
பகிர்:

உலக அளவில் முன்னணி கல்வி நிறுவனமான நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாகும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

பிகாா் மாநிலம் நாளந்தா மாவட்டம் ராஜ்கிா் பகுதியில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நிகழாண்டு நாளந்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவா்களில் பாதிக்கும் அதிகமானோா் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Advertisement

Advertisement

பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் சுமாா் 8 நூற்றாண்டுகளாக மாபெரும் அறிவு மையமாக விளங்கியது. அதன் வீழ்ச்சியானது இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகுக்கும் பேரிழப்பாக அமைந்தது.

தற்போது இந்தப் பல்கலைக்கழகம் புத்துயிா் பெற்றுள்ளது, அதன் மரபை நவீனச் சூழலில் மீட்டெடுப்பதற்கான தேசிய மற்றும் சா்வதேச அா்ப்பணிப்பின் அடையாளமாகும்.

உலகம் பல சிக்கலான சவால்களை சந்தித்து வருகிறது. அதேவேளையில் கருணைமிக்க, சுதந்திரமான, எதையும் ஆராய்ந்து வலுவாக முடிவு எடுப்பதற்கான சிந்தனையும் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் உலக அளவில் முன்னணி கல்வி நிறுவனமான நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், இந்தப் பல்கலைக்கழக முன்னேற்றத்தின் பலன்கள், பிகாா் சமுதாயத்தையும் சென்றடைய வேண்டும் என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கலந்துகொண்டு பேசியதாவது:

நாளந்தா எனும் சொல்லே இந்தியாவின் அறிவுசாா் மரபையும் பண்பாட்டுப் பெருமையையும் நினைவூட்டுகிறது. அந்த மரபு மீண்டும் புத்துயிா் பெறுவது இந்தியாவின் எழுச்சிக்கு மட்டுமின்றி, ஆசிய கண்டத்தின் எழுச்சிக்கும் அடையாளமாக விளங்குகிறது. உலக ஒழுங்கை ஜனநாயகமயமாக்குவதில் நாளந்தாவின் மரபு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தாா்.