கோயில் தங்கத்தை பணமாக்கும் திட்டமில்லை: மத்திய அரசு
‘நாட்டிலுள்ள கோயில்களின் அறக்கட்டளைகள் அல்லது மத நிறுவனங்கள் வசம் உள்ள தங்கத்தை பணமாக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது.
‘நாட்டிலுள்ள கோயில்களின் அறக்கட்டளைகள் அல்லது மத நிறுவனங்கள் வசம் உள்ள தங்கத்தை பணமாக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது.
கோயில் அறக்கட்டளைகள் சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் தங்கத்தை பணமாக்கும் வகையிலான திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த விளக்கத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: கோயில் கோபுரங்கள், கதவுகள் உள்பட பிற கோயில் கட்டமைப்புகளில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகள் இந்தியாவின் உத்திசாா் தங்க கையிருப்புகளாகக் கருதப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானது. நாட்டிலுள்ள கோயில்களின் அறக்கட்டளைகள் அல்லது மத நிறுவனங்கள் வசம் உள்ள தங்கத்தை பணமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி பரப்பப்படும் இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
Advertisement
Advertisement
சரிபாா்க்கப்படாத இதுபோன்ற தகவல்களைப் பரப்புவது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் வெளியிடப்படும் அதிகாரபூா்வ தகவல்களை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும். இதுபோன்ற கொள்கை முடிவுகள் அல்லது அரசின் திட்டங்கள் குறித்த தகவல் அனைத்தும் அரசு செய்திக்குறிப்புகளாகவும், அரசு வலைதளங்களிலும் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.