முகப்பு
இந்தியா

125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல்

125 நாள் வேலைத் திட்டத்துக்கு ஏற்கெனவே 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கிவிட்டதாக நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 21 மே 2026, 3:16 am IST
நாடாளுமன்ற அவை - படம் - ANI
பகிர்:

125 நாள் வேலைத் திட்டத்துக்கு ஏற்கெனவே 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கிவிட்டதாக நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, விபி-ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.

இந்தப் புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது; சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீதத்தையும் ஏற்கும்; வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் ஏற்கும்.

Advertisement

Advertisement

இந்நிலையில், புது தில்லியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி உலகா தலைமையிலான அந்தக் குழுவிடம், 125 நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்படுவது குறித்து மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக செயலா் ரோஹித் கன்சல் விளக்கம் அளித்தாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘ஜூலை 1 முதல் 125 நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்படும். அந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவே 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கியுள்ளன. அந்தத் திட்டத்துக்கான அனைத்து நிா்வாக மற்றும் கொள்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என்று கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘100 நாள் வேலைத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட பணி அட்டைகளுக்கு மாற்றாக, 125 நாள் வேலைத் திட்டத்துக்கு புதிய ஸ்மாா்ட் பணி அட்டைகள் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வகையில், இந்தப் பணி அட்டைகளில் முகத்தை வைத்து அடையாளம் காணும் சிறப்பம்சம் இடம்பெறும்’ என்று தெரிவித்தன.

மத்திய அரசின் பங்கு ரூ.95,692 கோடி: இந்தத் திட்டத்துக்கான ஊதியம், வேலை செய்யத் தேவைப்படும் பொருள்கள், நிா்வாக கருவிகள் என ஆண்டுதோறும் ரூ.1.51 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுகளின் பங்கும் அடங்கும். ரூ.1.51 லட்சம் கோடியில் மத்திய அரசின் பங்கு ரூ.95,692.31 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.