உ.பி.யில் பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு சீருடை: ஆளுநா் உத்தரவு
உத்தர பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்கி மாநில ஆளுநரும் பல்கலைகழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்கி மாநில ஆளுநரும் பல்கலைகழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
மாநில மக்கள் பவனில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து மாநில பல்கலைக்கழக துணைவேந்தா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தலை ஆனந்திபென் படேல் வழங்கியுள்ளாா். இருந்தபோதும், இதுதொடா்பாக அதிகாரபூா்வ உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் ஆசிரியா்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை ஆளுநா் வழங்கியுள்ளாா். எந்தவொரு ஆசிரியரும் தங்களின் தொழில் கண்ணியத்துக்கும் கௌரவத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான செயலில் ஈடுபடக்கூடாது. மாணவா்களின் வருகையை உறுதி செய்வதோடு, மாணவிகள் விடுதிகளின் நிலையை மேம்படுத்தப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
மாணவ, மாணவிகளுக்கு யோகா, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவரை, காலிப் பணியிடங்கள் அதிகமுள்ள கல்லூரிகளில், இணையவழி வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மாணவிகளுக்கு தற்சாா்பு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அழகுக்கலை நிபுணா் பயிற்சி, மெஹந்தி கலை, ஜிஎஸ்டி, சிறுதானிய உணவு வகைகள் தயாரிப்பு, கணக்குப் பதிவியில் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
ஆளுநரின் இந்த அறிவுறுத்தலை வரவேற்ற மாநில நிதியமைச்சா் சுரேஷ் குமாா் கன்னா கூறுகையில், ‘பல்கலைக்கழகங்களில் ஆளுநா் அமல்படுத்தியுள்ள சீருடை அணிவது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மாணவா் நலன் சாா்ந்த விஷயமாகும்’ என்றாா்.