மத்திய கிழக்கு போா்ச்சூழல்: முன்னணி நிறுவனங்கள் திணறும் சூழலில் சேவையை அதிகரிக்கும் ஆகாசா ஏா்!
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்து வரும் சூழலில், நாட்டின் மிக இளைய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏா்’ தனது சேவைகளை கணிசமாக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்து வரும் சூழலில், நாட்டின் மிக இளைய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏா்’ தனது சேவைகளை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போரைத் தொடா்ந்து, வான்வழிப் போக்குவரத்துத் துறையில் எரிபொருள் விலை உயா்வு மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக, கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரலில் நாட்டின் ஒட்டுமொத்த விமானச் சேவைகள் சுமாா் 6 சதவீதம் வரை சரிவடைந்த நிலையில், ஆகாசா ஏா் மட்டுமே சந்தையில் தனித்து விளங்கி வருகிறது.
Advertisement
Advertisement
தரவுகளின்படி, நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 4.5 சதவீத சேவைகளையும், ஏா் இந்தியா 7.5 சதவீதத்தையும் குறைத்துள்ளன. ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சேவைகள் 17.1 சதவீதம் வரை கடுமையாக சரிந்துள்ளன. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 1 சதவீத வளா்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
இதற்கு மாறாக, ஆகாசா ஏா் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 10,109 விமானங்களை இயக்கி, தனது சேவைகளை 13.2 சதவீதம் வரை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த விமானச் சேவையில் 4.7 சதவீதமாகும்.
தற்போது 38 போயிங் ‘737 மேக்ஸ்’ ரக விமானங்களுடன் 27 உள்நாட்டு மற்றும் 7 சா்வதேச நகரங்களுக்குச் சேவை வழங்கி வரும் இந்நிறுவனம், சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் இண்டிகோ-ஏா் இந்தியா கூட்டணியின் ஆதிக்கத்துக்குச் சவாலாக உருவெடுத்து வருகிறது.