மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி, மாணவர்கள் ஆர்பாட்டம்.
ஸ்ரீபெரும்புதூர், நவ.2:குன்றத்தூர் பகுதியில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலியானார். மாணவி பலியானதை தொடர்ந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கல்லூரி மாணவர்கள் புதன்க
ஸ்ரீபெரும்புதூர், நவ.2:குன்றத்தூர் பகுதியில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலியானார். மாணவி பலியானதை தொடர்ந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்றத்தூர் பகுதியில் மாதா பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 1000த்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இக்கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்ட செங்கம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது மகள் பவித்ரா(18)இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு கணிணி அறிவியல் படித்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் பவித்ரா மாணவர் விடுதியில் உள்ள குளியல் அறைக்கு புதன்கிழமை காலை சென்று அங்குள்ள வாட்டர் ஹீட்டர் போடுவதற்காக மின்சார சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாதா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து மின்சாரம் தாக்கி மாணவி பலியானது கல்லூரி மாணவிகளுக்கு தெரிய வரவே ஆத்திரம் அடைந்து கல்லூரியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால்தான் பவித்ரா மின்சாரம் தாக்கி பலியானதாகவும், போதுமான அடிப்படை வசதிகளை கல்லூரி நிர்வாகம் உடனடியாக செய்து தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் அம்பத்தூர் காவல் துணைஆனையர் ஜெயகுமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் ஒரு வாரத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர். கல்லூரி மாணவி இறந்ததை தொடர்ந்து மாதா பொறியியல் கல்லூரிக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.