திருச்சுழி அருகே மாணவர் கடத்தல் : 8 பேர் கைது
விருதுநகர் அருகே திருச்சுழியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பிளஸ்2 மாணவரை நேற்று இரவு காரில் கடத்தியதாக 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே திருச்சுழியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பிளஸ்2 மாணவரை நேற்று இரவு காரில் கடத்தியதாக 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது, திருச்சுழி அருகே அம்மன்பட்டியைச் சேர்ந்த முனியசாமி(56). இவர் இப்பகுதியில் கருவேல மரங்களை வெட்டி கரி மூட்டம் போடும் தொழில் செய்து வருகின்றார். இதே ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமியிடம், தன்னிடம் இருந்த 6 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ.55 ஆயிரம் வரையில் பெற்றுள்ளார்.
தற்போது அத்தொகை வட்டியோடு ரூ.86 ஆயிரம் வரையில் அதிகரித்துள்ளது. இதையடுத்து காளையார்கரிசல்குளம் செல்வராஜ் என்பவரிடம் ரூ.86 ஆயிரம் வாங்கி அதை முத்துலட்சுமியிடம் நகை திருப்புவதற்காக கொடுத்துள்ளார். மேலும், பணத்தைப் பெற்றுக் கொண்ட நிலையிலும் நகையை திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார் முத்துலட்சுமி.
Advertisement
இது குறித்து முனியசாமி விசாரித்ததில், இவருக்கு கடன் கொடுத்திருந்த செல்வராஜ் தான் நகையை திருப்பித் தரகூடாது என தடுத்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த முனியசாமி உள்ளிட்ட சிலர் சேர்ந்து வாகனத்தில் செல்வராஜின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லையென்பதை அறி்ந்து, அவரது மகனான பிளஸ்2 படித்து வரும் முருகனை (17) வேனில் கடத்திச் சென்றார்களாம். இந்த வாகனம் நரிக்குடி என்ற இடத்துக்கு அருகே போலிஸ் வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து விரைந்து சென்ற திருச்சுழி போலீஸார் முருகனை மீட்டனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக முனியசாமி உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.