கோஷ்டி பூசல் : கடலூர் நகர்மன்றக் கூட்டம் நடப்பதில் தாமதம்
கோஷ்டி பூசல் காரணமாக கடலூர் நகர்மன்றக் கூட்டம் நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோஷ்டி பூசல் காரணமாக கடலூர் நகர்மன்றக் கூட்டம் நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடக்க இருந்தது. ஆனால், கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. தலைவர் மட்டுமே வந்து நகர்மன்றக் கூட்ட வளாகத்தில் அமர்ந்திருந்தார்.
நகர்மன்ற தலைவர் சுப்ரமணியன் (அதிமுக), துணைத் தலைவர் குமார் (அதிமுக) மற்றும் எதிர்க்கட்சிகக் கவுன்சிலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூர் நகர்மன்றக் கூட்டத்தில் மொத்தம் 45 வார்டுகளில் 35 அதிமுக, பாமக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 10 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர். நகர்மன்றத் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கூட்டம் நடத்துவதில் பல முறை சிக்கல்கள் ஏற்பட்டன. அதே சமயத்தில் பல கூட்டங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டத்தைப் புறக்கணித்து நகராட்சி வளாகத்தில் ஒரு சாரார் கூட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டும், தலைவருக்கு ஆதரவான 3 அதிமுக கவுன்சிலர்களைத் தவிர வேறு யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வரவில்லை.
மேலும், துணைத் தலைவர் குமார் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் 30 பேர் கடலூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் கவுன்சிலர்களும், நகர்மன்றத் தலைவர் மீது பல்வேறு குறைகளைத் தெரிவிக்கின்றனர். கடலூர் முழுவதும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் அது விறியமானதாக, தரமானதாக இல்லை. மேலும் பாதாள சாக்கடைப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது என பல்வேறு குறைகளைக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் நகர்மன்றக் கூட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து, தலைவர் சுப்ரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் மாசுகப்பட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.பி. சம்பத்திடம் கூறியுள்ளதாகவும், அவர் மற்ற கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தி கூட்டத்தை கூட்ட ஏற்பாடுகள் செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.