சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் மறியல்: 102 பேர் கைது
காவிரி நீரை பெற்றுத் தராமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்தியஅரசை கண்டித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம்
காவிரி நீரை பெற்றுத் தராமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்தியஅரசை கண்டித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட காவிரி மீட்புக்குழு சார்பில் விவசாயிகள் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 102 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்தியஅரசை கண்டித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் கூட்டி நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்திற்கு அனுப்பக்கூடாது என மத்தியஅரசை வலியுறுத்த வேண்டும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழக கனிம வளங்களை மத்தியஅரசு எடுக்கக்கூடாது என வலியுறுத்த வேண்டும், கருகிப் போன சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலர் சி.ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியது: தமிழகஅரசு தொடுத்த காவிரி நீர் வழக்கை விசாரித்து வந்து உச்சநீதிமன்றம், டிச.10 அன்று நீதி வழங்கும் என்று எதிர்பாத்து காத்துக் கொண்டிருந்தோம். உச்சநீதிமன்றமோ, காவிரி கண்காணிப்புக் குழுவிடமும், காவிரி ஆணையத்திடம் செல்லுமாறு கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டது. அடுத்த விசாரணையை 2013 ஜன.4-ம் தேதி தள்ளி வைத்துவிட்டது. அதற்குள் தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களின் கதி என்னாவது. டிச.9-ம் தேதி மாலையே கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரிநீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது. தமிழக முதல்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதோடு நிறுத்திவிட்டார். எனவே தமிழகஅரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, மத்தியஅரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி நீரை பெற்று சம்பா பயிரை பாதுகாக்க வேண்டும் என சி.ஆறுமுகம் தெரிவித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உழவர் முன்னணி நிர்வாகிகள் சி.ஆறுமுகம், நாராயணசாமி, மா.கோ.தேவராசன், கென்னடி, கு.சிவப்பிரகாசம், குபேரன், சம்பந்தம், மாரிமுத்து, அ.கோ.சிவராமன், தமிழர் தேசிய இயக்கம் பாலு, கலியமூர்த்தி, உள்ளிட்ட 102 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.