விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரா கோட்ஸ் ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்ட சம்பள உயர்வினை தூத்துக்குடி, மதுரை மதுரா கோட்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆலை தெரிவித்த சம்பள உயர்வை ஏற்கவில்லை.
இதனிடையே சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஆலைக்கு இழப்பு ஏற்படும் வகையில் செயல்படுவதாக தெரிவித்து இம்மாதம் 12 ம் தேதி ஆலையினை நிர்வாகம் கதவடைப்பு செய்தது.
இதற்கிடையே தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், மூடப்பட்ட ஆலையை திறக்க வேண்டும், தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சி அருகில் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத்தை தொழிலாளர் கூட்டமைப்பை சேர்ந்த அமர்நாத் தொடங்கி வைத்தார். கூட்டமைப்பு நிர்வாகிகள் பெரியசாமி, காமராஜ், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 1000 பேர் கலந்து கொண்டனர்.