முகப்பு
தற்போதைய செய்திகள்

காந்தி, பாரதியை இழிவுபடுத்தியவருக்கு பதவி உயர்வா? தொழிற்கல்வி ஆசிரியர்கள் பிப்.20-ல் போராட்டம்

புதுச்சேரி, பிப். 17: மகாத்மா காந்தி, பாரதியாரை இழிவுபடுத்திய விரிவுரையாளருக்கு பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெறுவதாகக் கண்டித்து, பாரதியார் பல்கலைக்கூட தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினர் வரும் பிப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:42 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:44 PM

புதுச்சேரி, பிப். 17: மகாத்மா காந்தி, பாரதியாரை இழிவுபடுத்திய விரிவுரையாளருக்கு பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெறுவதாகக் கண்டித்து, பாரதியார் பல்கலைக்கூட தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினர் வரும் பிப்ரவரி 20-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

சங்கத் தலைவர் இராம.மதியழகன், செயலர் பி.வி.பிரபாகரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத்துறை துணைப் பேராசிரியராக இருந்த பி.வி.போஸ், மகாத்மாகாந்தி, பாரதியார், பாரதிதாசன் ஆகியோரை இழிவுபடுத்தியும், அவர்களது பாடல்களைப் பாடக்கூடாது என்றும், பாடும் மாணவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும் கூறியதால், கடந்த 2002ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அவர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

விசாரணையில் குற்றம் நிரூபனமானதும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான, செயலர் எம்.சத்தியவதி, பி.வி.போஸின் ஊக்க ஊதியம் இரு நிலைகள் குறைக்கப்பட்டு, தண்டன அளித்தார்.

அவர், கல்வித்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்ததால், எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்பட்டு, மீண்டும் பணியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பி.வி.போஸ் கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் வகையில், மறுபடியும் தேசத் தலைவர்களையும், பாரதியார், பாரதிதாசனையும் இழிவுபடுத்திப் பேசினார். அவர்களது பாடல்களைப் பாடத் தடை விதித்தார்.

இதனால் மீண்டும் 2010 நவம்பர் 29-ம் தேதி செயலர் கண்ணாஜியால் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டும், அப்போது இருந்த அதிகாரிகள் அவருக்கு எவ்வித தண்டனையும் அளிக்காமல், பணியில் சேர்த்துக்கொண்டனர்.

இவ்வாறு தலைவர்களைப் பழித்து, தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட பி.வி.போஸுக்கு, பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதைக் கண்டிக்கிறோம்.

மேலும், கடந்த 23 ஆண்டுகளாக காலை நேரத்தில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு பாடப்பட்ட இறைவணக்கப் பாடலை, தற்போது துறைத் தலைவராக இருக்கும் எல்.அன்னபூர்ணா நிறுத்திவிட்டார். இதைக் கண்டித்தும் வரும் 20ம் தேதி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பில் தொடர் வேலை நிறுத்தத்திலும், உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.