100நாள் வேலைத்திட்டத்தில் கூலி வழங்காததால் திருக்கோவிலூர் அருகே சாலைமறியல்
திருக்கோவிலூர், ஜூலை 14: திருக்கோவிலூர் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வழங்கப்படாததைக் கண்டித்து பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் கீரனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகு
திருக்கோவிலூர், ஜூலை 14: திருக்கோவிலூர் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வழங்கப்படாததைக் கண்டித்து பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் கீரனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 3 வாரமாக வேலை செய்ததற்கு யாருக்கும் கூலி வழங்கப்படவில்லை. இதனால் அடுத்த 2 வாரங்கள் யாருக்கும் வேலை எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 3 வாரமாக வேலை செய்ததற்கு உரிய கூலி நேற்று மாலை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்றனர். ஆனால், பலத்த மழை பெய்ததால், கூலி வழங்கப்படுவது இன்று காலை என்று தள்ளிவைக்கப் பட்டது.
இதனால் இன்று காலை பெரும்பாலானவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்றனர். இதனிடையே ஊராட்சி மன்றத்தலைவருக்கு எதிரான சிலர், அவர்களிடம், 3 வாரக் கூலி மட்டும் வாங்கிவிட்டு ஏமாந்து விடாதீர்கள்; அடுத்து வேலையையும் கேட்டுச் செல்லுங்கள் என்று தூண்டி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் தங்களுக்கு கூலி வேண்டுமானால் பிறகு கொடுங்கள்; இப்போது தொடர்ந்து வேலையைக் கொடுங்கள் என்று கேட்டு, பணிகள் நடக்கும் ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர். ஆனால், ஊராட்சி மன்ற நிர்வாகிகளோ இன்றே கூலியை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதனால் பெரும் குழப்ப நிலை நீடிக்கவே, பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி- சித்தூர் புறவழிச்சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களில் 250க்கும் மேற்பட்டோர் பெண்கள். அனைவரும் தங்கள் கைகளில் கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள் ஆகிய கருவிகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.