முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் நகராட்சி பெண் கவுன்சிலர் மற்றும் கணவர் படுகொலை

விருதுநகர், ஜூன் 27: விருதுநகரில் அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் இருவரையும் டாடா சுமோ காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து தப்பியோடியது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:55 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:25 PM

விருதுநகர், ஜூன் 27: விருதுநகரில் அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் இருவரையும் டாடா சுமோ காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து தப்பியோடியது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்தக் கொலை நடந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் உடனே கடைகளை அடைத்தனர்.

விருதுநகர் மேலத் தெருவைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் எஸ்.ஆர்.நாகராஜன்(50), இவரது மனைவி தங்கப்பாண்டியம்மாள்(45) விருதுநகர் நகராட்சி 21-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மேலத்தெருவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்களைப் பின் தொடர்ந்து வந்த டாடா சுமோ கார் ஒன்று, தேசபந்து மைதானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே வந்த போது திடீரென பைக் மீது மோதியது. இதை அடுத்து இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்துக்குள் காருக்குள் இருந்து இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல், கையில் வைத்திருந்த பட்டா கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் இருவரையும் சராமரியாக  வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அவர்களைக் கொன்ற மர்ம கும்பல், வந்த வழியாகவே தப்பிச் சென்றது.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு விருதுநகர் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலை முன் விரோதம் அல்லது அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள். முதல்கட்டமாக கொலை நடந்த பகுதியில் உள்ள பூக்கடை மற்றும் பழக்கடை வியாபாரிகளிடம் கொலையாளிகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், இக்கொலைச் சம்பவம் நடைபெற்றபோது உடனடியாக கடைகளை அடைத்துச் சென்றவர்களிடம் முதல் கட்டமாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

இந்தக் கொலை 7.30க்கு தேசபந்து மைதானத்தில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் நடந்துள்ளது. இவர்கள் இருவரையும் 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதைப் பார்த்து கோயிலுக்கு முன் பாதுகாப்புக்காக இருந்த போலீஸார் அப்பகுதியில் கடையில் இருப்பவர்களிடம் டாடா சுமோ காரை சுற்றி வளைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த கார் பொதுமக்கள் மேல் ஏற்றுவதுபோல் வந்ததால் அவர்களால் சுற்றி வளைக்க முடியவில்லை என போலீஸார் ஒருவர் கூறினார்.

இதனால், பழைய பேருந்து நிலையம், தேசபந்து மைதானம், பஜார் தெரு, காந்திபுரம் ஆகிய தெருக்களில் உள்ள அனைத்து ஜவுளி கடைகள், மார்க்கெட் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு போக்குவரத்து பஸ்கள் அனைத்தும் உடனே நிறுத்தப்பட்டன. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.