காரைக்கால் வந்த திருப்பதி பெருமாள் ரதத்தை காத்திருந்து தரிசித்த பக்தர்கள்!
காரைக்கால், மே 19 : காரைக்கால் வந்த திருப்பதி ஸ்ரீ திருவேங்கடநாதன் ரதத்துக்கு திரளான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், திருமலையில் காத்திருப்பதுபோல், சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசன
காரைக்கால், மே 19 : காரைக்கால் வந்த திருப்பதி ஸ்ரீ திருவேங்கடநாதன் ரதத்துக்கு திரளான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், திருமலையில் காத்திருப்பதுபோல், சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம் செல்லும் வழியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீபத்மாவதி தாயார் ஸ்ரீஅலமேலுமங்கைத் தாயார் உடனாகிய ஸ்ரீதிருவேங்கடநாதன் வீற்றிருக்கும் ரதம் வெள்ளிக்கிழமை திருப்பதியில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை 11 மணிக்கு காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோவில் வாயிலை வந்தடைந்தது.
ரதத்தினுள் இருந்த ஸ்ரீ திருவேங்கடநாதனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலில் நின்று தரிசனம் செய்தனர். சுமார் 10 நிமிடம் மட்டுமே நின்ற ரதம் பிறகு திருமலைராயன்பட்டினம் நோக்கிப் புறப்பட்டது. அங்குள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் வாயிலில் திரண்ட பக்தர்களுக்காக ரதம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் வழிபாடு முடிந்த பிறகு வாஞ்சூரில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கு சென்றது.
மார்க் துறைமுக நிறுவனத் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி ஏற்பாட்டின்படி துறைமுகத்துக்கு சென்ற ரதத்தை அதிகாரிகள், ஊழியர்கள் வாயிலில் இருந்தவாறு வரவேற்பு அளித்து உள்ளே அழைத்து சென்றனர். துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.
தரிசனத்துக்கு 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு: காரைககால் வந்த ரதம் ஸ்ரீ நி்த்யகல்யாணப் பெருமாள் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. முன்னே வந்த பட்டசாரியார்கள், ரதத்தின் கதவு சாவையை கொண்டு வாஞ்சூர் துறைமுகத்துக்கு சென்றுவிட்டனர். இவர்கள் துறைகத்தில் குளியலை முடித்துவிட்டு வருவதற்கு சுமார் 2 மணி நேரமானது. சாவி வந்து கதவு திறந்து பெருமாளை தரிசித்துவிட்டு செல்லலாமென, திரண்டிருந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் சாலையிலேயே நின்றனர். பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சாலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தது. திருப்பதியில்தான் காத்திருந்து தரிசிக்கும் நிலையென்றால், காரைக்கால் வந்த பெருமாளை தரிசிக்கவும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் தரப்பில் தெரிவித்தனர்.