முகப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர் தீக்குளித்து தற்கொலை: முறையான விசாரணை கோரி மக்கள் மயானத்தில் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்களின் நலனுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கல்லூரி மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 4 நவம்பர், 2012 at 7:19 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்களின் நலனுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கல்லூரி மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறி, ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மயானத்தில் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதில் இரு சமுதாயத்தினரிடையே ஓராண்டுக்கு மேலாக பிரச்னை இருந்து வருகிறது. ஒரு சமுதாயத்தினர் தங்கள் பகுதியில் கட்ட வேண்டும் என்றும், மற்றொரு சமுதாயத்தினர் தங்கள் பகுதில் கட்டடம் கட்ட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

காடனேரியைச் சேர்ந்த பா.ராஜகோபால் (38) என்பவரின் மகன் விஜய் (21). இவர் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். புதன்கிழமை இரவு காடனேரி பிள்ளையார் கோயில் பின்புறம் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துச் சென்று தீக்குளித்துள்ளார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

Advertisement

தீக்குளிப்பதற்கு முன்னர் அவர் கைப்பட எழுதிய கடிதம் வீட்டில் இருந்துள்ளது. அதில் காடனேரி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, உங்கள் தெருவில் இதற்காக யாராவது தீக்குளித்தால், உங்கள் பகுதியில் அந்தக் கட்டடத்தை கட்ட நாங்கள் விட்டுத் தருகிறோம் என்று கூறியதாக எழுதியுள்ளார்.

அவர் கூறியபடி, நம் பகுதி மக்கள் நன்மைக்காக நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து விஜயின் தந்தை பா.ராஜகோபால், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே போலீஸார் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறி, தற்கொலை செய்து கொண்ட மாணவருக்கு ஆதரவானவர்கள், ஞாயிற்றுக்கிழமை காடனேரியில் உள்ள மயானத்தில் காலவரையரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல் தலைமையில் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.