மானாமதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் பலி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டெங்கு காய்ச்சல் பாதித்த இளைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டெங்கு காய்ச்சல் பாதித்த இளைஞர் உயிரிழந்தார்.
மானாமதுரை, பூக்காரத்தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்தின் மகன் ஹரீஷ் (27). இவர் காரைக்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்து வருகிறார்.
கடந்த வாரம் விடுமுறைக்காக மானாமதுரை வந்திருந்தார். அப்போது இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில், இவரை மானாமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறி, அரசு மருத்துவமனையில் சேர்க்க வலியுறுத்தினர். ஆனால், அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஹரீஷ் உயிரிழந்தார்.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் மானாமதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.