இலங்கை கடற்படையைக் கண்டித்து திமுக உண்ணாவிரதம்
காரைக்கால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய அரசு இப்பிரச்னையில் தலையிட வலியுறுத்தியும் திருமலைராயன்பட்டினத்தில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய அரசு இப்பிரச்னையில் தலையிட வலியுறுத்தியும் திருமலைராயன்பட்டினத்தில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு, பட்டினச்சேரி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 26 பேர் கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இதனைக் கண்டித்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் திருமலைராயன்பட்டினத்தில் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவி கீதாஆனந்தன் தலைமை வகித்தார். போராட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க. அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் பேசியது:
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் அதிகமானோர் அண்மைக் காலமாக இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டும், சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். கேரளத்தை சேர்ந்த இரு மீனவர்கள் இத்தாலி கப்பல் பணியாளர்களால் கொல்லப்பட்ட போது, இந்திய அரசு, அந்நாட்டு கப்பல் பணியாளர்களை வரவழைத்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. கேரள மீனவர்களுக்கு காட்டும் ஆர்வத்தில் ஒரு சதம் கூட தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீது மத்திய அரசு காட்டுவதில்லை. இனியாவது மத்திய அரசு தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றார்.
போராட்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், தி.மு.க. நிர்வாகிகள் முருகன், கே.டி.வி.சங்கர், ஆசைத்தம்பி, ராஜ்மோகன், முருகானந்தம், ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.