சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க அனைத்து சமய சகோதர வாழ்வுச் சங்கம் ஆட்சியரிடம் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வலியுறுத்தும் வகையில், அனைத்து சமய சகோதர வாழ்வுச் சங்கத்தினர் காரைக்கால் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வலியுறுத்தும் வகையில், அனைத்து சமய சகோதர வாழ்வுச் சங்கத்தினர் காரைக்கால் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே இச்சங்கத்தின் சார்பில் மீனவ சகோதர மீட்புக் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தியது. கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தோர், இலங்கை கடற்படையினரின் செயல்பாட்டைக் கண்டித்தும், தமிழக, காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க அரசுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினர்.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என்.ஜி.ஆர்.வேதாசலம் தலைமை வகித்தார். காரைக்கால் மறைவட்ட பங்கு குரு அல்போன்ஸ் அடிகளார், சமாதானக்குழு உறுப்பினர் கே.தண்டாயுதபாணிபத்தர், எஸ்.கே.டி.ஆரிபு மரைக்காயர், ஓய்வு பெற்ற திட்டத்துறை இணை இயக்குநர் ஆர்.மோகன், தெய்வசகாயம் சபரிநாதன் உள்ளிட்ட பலர் மீனவர்கள் பிரச்னைகள் குறித்துப் பேசினர்.
தொடர்ந்து இச்சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். இலங்கை கடற்படையினரின் மனிதாபிமான செயல் கண்டனத்துக்குரியது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை அரசுடன் பேசி, மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்னை ஏற்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டது.