திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவையின் போது கொடுக்கப்படும் பிரத்யேக ஆரத்தியை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
திருமலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ, தலைமை அர்ச்சகர், ஜீயங்காரர்கள் மற்றும் 5 ஆச்சார்யர்கள் சேர்ந்து செவ்வாய்க்கிழமை ஏழுமலையானின் நித்திய பூஜை கைங்கர்யங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். ஏழுமலையானுக்கு தற்போது சுப்ரபாத சேவை நடைபெறும் விதானம் குறித்து கலந்தாலோசித்தனர்.
பின்னர் சுப்ரபாத சேவை நடைப்பெறும் சமயங்களில் ஏழுமலையான் அப்போது தான் துயில் எழுந்திருப்பதால் அவருக்கு இடையூறு செய்யும் விதமாக ஆரத்திகள் கொடுக்க கூடாது எனவும் கருடாழ்வாருக்கும் ஏழுமலையானுக்கும் இடையில் எந்த பக்தர்களும் சுப்ரபாத சேவையின் போது குறுக்கே நிற்கக்கூடாது எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் சுப்ரபாத சேவையின் போது சுப்ரபாதம் சொல்லும் போது கண்டிப்பாக அனைத்து பக்தர்களும் அமைதியாக இருக்க வேண்டும். சுப்ரபாதம் சொல்லி முடித்த பிறகு நடைப்பெறும் வேதபாராயணத்தின் போது அரசாங்க ஆரத்தி மட்டும் அனுமதிக்கப்படும் என்று கூறினார். இது வியாழக்கிழமை முதல் அமல் படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.