முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்படையினரால் காயமடைந்த காரைக்கால் மீனவர்களுக்கு நிவாரணம் அளிப்பு

இலங்கை கடற்படையினரால் காயமடைந்த காரைக்கால் மீனவர்களுக்கு புதுவை அரசின் நிவாரணம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையிலிருப்போருக்காக வழங்க முன்வந்த நிவாரணத்தை மீன

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:23 AM
பகிர்:

இலங்கை கடற்படையினரால் காயமடைந்த காரைக்கால் மீனவர்களுக்கு புதுவை அரசின் நிவாரணம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையிலிருப்போருக்காக வழங்க முன்வந்த நிவாரணத்தை மீனவ குடும்பத்தார் பெற மறுத்துவிட்டனர்.

காரைக்கால் பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அண்மையில் நடந்தன. இவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு காரைக்காலை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதுவை முதல்வர் என்.ரங்கசாமியை வலியுறுத்தினர்.

காயமடைந்த மீனவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், சிறையிலிருக்கும் மீனவக் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

இதற்கான தொகை வழங்கும் நிகழ்ச்சி மீன்வளத் துறை சார்பில் கிளிஞ்சல்மேடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 12-ம் தேதி மீன்பிடிக்க சென்ற கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த ராஜூ, ரமேஷ், வேதநாயகம், செல்வம், வீரபாபு, சத்தியநாதன், வீரப்பன் ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரத்தை, குடும்பத்தாரிடம் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு, பேரவை உறுப்பினரும், காரைக்கால் வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுமத் தலைவருமான வி.எம்.சி.சிவக்குமார் ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநர் என்.இளையபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிவாரணத்தை பெற மீனவர்கள் மறுப்பு : அண்மையில் இலங்கை கடற்படையினரால் 26 பேர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். இந்த தொகையும் இந்த நிகழ்ச்சியில் வழங்குவதாக இருந்தது. ஆனால் சிறையிலிருக்கும் குடும்பத்தார் யாரும் இதனை வாங்க மறுத்துவிட்டனர். தங்களுக்கு சிறையிலிருப்போரை விடுவிக்க புதுவை அரசும், மத்திய அரசும் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் வந்த பிறகே அரசின் நிவ்ராணத்தை பெற்றுக்கொள்வோம் என தெரிவித்துவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →