ஒழுக்கம் இல்லாத கல்வி, உயர்வு தராது: அமைச்சர் எம்.சி.சம்பத் மாணவர்களுக்கு அறிவுரை
கல்வி பயிலும் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும், இணையத்தளம் மூலம் உலகளவிலான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் பரிசாகவும், தாய் வீட்டுசாதனமாகவும் மடிக்கணினியை
ஒழுக்கம் இல்லாத கல்வி, உயர்வு தராது. எனவே மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிகில் தமிழகஅரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் 353 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கிப் பேசினார். அவர் பேசியதாவது:
கல்வி பயிலும் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும், இணையத்தளம் மூலம் உலகளவிலான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் பரிசாகவும், தாய் வீட்டுசாதனமாகவும் மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த திட்டம் புதுச்சேரி, பீகார், கர்நாடகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்தை பின்பற்றி உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் மடிக்கணினி திட்டத்தை அறிவித்துள்ளார். 2011-12 ஆண்டு ஆயிரம் கோடி நிதிஒதுக்கி 9 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 22-13-ம் ஆண்டு ரூ.1500 கோடி நிதிஒதுக்கி 7 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. 2013-14 ஆண்டிற்கு ரூ.1500 கோடி நித ஒதுக்கி 5 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 27,389 மாணவர்களுக்கும், நடப்பு ஆண்டில் 26,349 மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உதவிபெறும் பள்ளிகள் 117, பொறியியல் கல்லூரி-1, தொழில்நுட்பக்கல்லூரி-2, கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 ஆகியவற்றின் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழத்தை தமிழகஅரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த கல்லூரி மேன்மேலும் வளர்ச்சியடையும். பல்கலைக்கழகத்தில் அனைத்து குறைபாடுகளும் நீக்கப்பட்டு தலைசிறந்த பல்கலைக்கழகமாக திகழும் என அமைச்சர் தெரிவித்தார்.
விழாவிற்கு உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் ஏ.ஜெயக்குமார் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்),முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.அருண்மொழிதேவன், பி.எஸ்.அருள், நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஏ.பாண்டியன் (குமராட்சி), வி.ஆர்.ஜெயபாலன் (கீரப்பாளையம்), கே.அசோகன் (பரங்கிப்பேட்டை), வட்டாட்சியர் எம்.விஜயா, மக்கள்-தொடர்பு அதிகாரி (பொறுப்பு) நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரிவுரையாளர் எஸ்.கோகுலாச்சாரி நன்றி கூறினார்.