முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்கள்ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிப்பு

சேலத்தில் புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்களை ஆயிரக்கணக்கில் தயாரித்ததாக 3 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அழகாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 11 ஆகஸ்ட், 2013 at 11:05 PM
பகிர்:

சேலத்தில் புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்களை ஆயிரக்கணக்கில் தயாரித்ததாக 3 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அழகாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நடிகர் விஜய் நடித்து இயக்கியுள்ள தலைவா திரைப்படம் தமிழகத்தைத் தவிர அண்டை மாநிலங்களில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவா திரைப்படத்தின் திருட்டு டி.வி.டி.க்கள் சேலத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள அத்வைத ஆஸ்ரமம் சாலையில் உள்ள ஒரு மாடி வீட்டில் தலைவா திரைப்பட டி.வி.டி.க்கள் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்படுவதாக விஜய் ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது.

 இதையடுத்து ரசிகர் மன்ற ஆலோசகர் டி.பாலு, செய்தித் தொடர்பாளர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு வீட்டின் மாடியில் ஆயிரக்கணக்கில் திருட்டு டி.வி.டி.க்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் சந்திரசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

 அவரது உத்தரவின் பேரில் அழகாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 கணினிகளைக் கொண்டு பல ஆயிரக்கணக்கில் தலைவா, பட்டத்து யானை, மரியான் உள்ளிட்ட புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்கள் கள்ளத் தனமாக தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

 இதையடுத்து திருட்டு டி.வி.டி. தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணினிகள், தயாரிக்கப்பட்ட டி.வி.டி.க்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், திருட்டு டி.வி.டி. தயாரித்ததாக தருமபுரியைச் சேர்ந்த முரளி (28), குமார் (38), அருள் பிரபு (34) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த தொழிற்சாலை அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ராஜா (26) என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரைத் தேடி வருகின்றனர்.

 முன்னதாக திருட்டு டி.வி.டி. தயாரிக்கும் தொழிற்சாலை எதிரில் திரண்ட ஏராளமான விஜய் ரசிகர்கள், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை உதவி ஆணையர் சந்திரசேகரன் அங்கிருந்து வெளியேற்றினார்.

 இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் கூறும்போது, தலைவா திரைப்படம் வெள்ளிக்கிழமை பிற மாநிலங்களில் வெளியானது. ஆனால் தமிழகத்தில் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில் கடந்த வியாழக்கிழமை முதலே இத்திரைப்படத்தின் டி.வி.டி.க்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.