சிதம்பரம் அருகே இரு தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு திங்கள்கிழமை இரவு புவனகிரி வழியாக செல்லும் தனியார் பஸ் புறப்பட்டது. அப்போது புவனகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்ஸில் ஏறியுள்ளனர். ஆனால் வண்டிகேட்
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் பொதுமக்களால் இரு தனியார் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு திங்கள்கிழமை இரவு புவனகிரி வழியாக செல்லும் தனியார் பஸ் புறப்பட்டது. அப்போது புவனகிரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்ஸில் ஏறியுள்ளனர். ஆனால் வண்டிகேட் பகுதிக்கு பஸ் சென்றதும் புவனகிரி பயணிகளை மட்டும் கீழே இறக்கிவிட்டு, சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக சென்றது. இதனால் ஆத்திரமடைந்த புவனகிரி பகுதி மக்கள் இன்று காலை 8.30 மணிக்கு புவனகிரி வந்த தனியார் பஸ்ஸை கடைவீதியில் மறித்து சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அதன் பின்னர் வந்த மற்றொரு தனியார் பஸ்ஸையும் மறித்து சிறைபிடித்தனர். தகவல் அறிந்த போலீஸார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் இரண்டையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புவனகிரி வழியாக பர்மிட் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கண்டிப்பாக புவனகிரி வழியாக கடலூர் செல்ல வேண்டும். அதனை மீறி புறவழிச்சாலை வழியாக சென்றால் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டதை அடுத்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.