திருமாவளவன் பேனர் கிழிப்பு: இருதரப்பினர் கல்வீச்சு, பதற்றம்
ஐஸ்கிரீம் பார்லரில் ஒட்டப்பட்டிருந்த திருமாவளவன் பிறந்தநாள் போஸ்டரைக் கிழித்ததால், அந்தக் கடை சூறையாடப்பட்டது. திருமாவளன் பேனர் கிழிக்கப்பட்டதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கத்தினரும், பொதுமக்களும் பரஸ்பரம் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.
ஐஸ்கிரீம் பார்லரில் ஒட்டப்பட்டிருந்த திருமாவளவன் பிறந்தநாள் போஸ்டரைக் கிழித்ததால், அந்தக் கடை சூறையாடப்பட்டது. திருமாவளன் பேனர் கிழிக்கப்பட்டதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கத்தினரும், பொதுமக்களும் பரஸ்பரம் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.
பார்லர் மீது தாக்குதல்:
கரியமாணிக்கம் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் பார்லர் கடை சுவரில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதனை அக்கடையின் உரிமையாளர் வெள்ளிக்கிழமை மாலை கிழித்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வில்லேந்தி என்பவர் உள்பட 3 பேர், கடைக்காரருடன் தகராறு செய்துள்ளார். அப்போது பரந்தாமன் என்ற காவலர் பிறந்தநாள் விழா முடிந்து விட்டதே எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வில்லேந்தியும் அவரது ஆதரவாளர்களும் பரந்தாமனைத் தாக்கிவிட்டுத் தப்பினர். இதில் காயமடைந்த பரந்தாமன் நெட்டப்பாக்கம் அரசு சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை அந்த ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்ற சிலர், அக்கடையை அடித்து நொறுக்கினர். இதில் கடையிóல் வைத்திருந்த குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை சேதமடைந்தன. இது தொடர்பாக, நெட்டப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இருதரப்பினர் மோதல்:
கரியமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் டயர் நிறுவனம் முன்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர்கள் முன்னணி சார்பில் திருமாவளவன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளர் முன்னணியினர் சனிக்கிழமை காலை சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சாலைமறியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பரஸ்பரம் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதில், தொழிலாளி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த போலீஸார் அப்பகுதிக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இருப்பினும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க ஆயுதம் தாங்கிய ஐஆர்பி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.