முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுவையில் ஏஎப்டி பஞ்சாலையை திறக்கக் கோரி திமுகவினர் உண்ணாவிரதம்

ஏஎப்டி பஞ்சாலையை உடனே திறக்க வலியுறுத்தி திமுக சார்பில் வியாழக்கிழமை புதுவை சுதேசி மில் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:07 PM
பகிர்:

ஏஎப்டி பஞ்சாலையை உடனே திறக்க வலியுறுத்தி திமுக சார்பில் வியாழக்கிழமை புதுவை சுதேசி மில் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுவை மாநில அரசு கடந்த 25.2.13-ல் நிதிநிலையைக் காரணம் காண்பித்து ஏஎப்டி ஆலையை மூடி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. புதுவை மாநில காங்கிரஸ் கட்சி, ஆளும் என்.ஆர். காங்கிரஸ் இடையே நடக்கும் அரசியல் போட்டியில் தொழிலாளர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

நூறாண்டு பழமையான ஏஎப்டி ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

11 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்க வேண்டும்,

காழ்ப்புணர்ச்சி காட்டாமல் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, கண்ணன் எம்.பி. உள்ளிட்டோர் ஆலையை புனரமைக்கத் தேவையான ரூ.500 கோடி நிதியை பெற்றுத் தர வேண்டும்.

ஆலையை மீண்டும் திறக்கும் வரை தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்,

455 தொழிலாளர்களுக்கு தர வேண்டிய பணிக்கொடையை தர வேண்டும்.

தன் விருப்ப ஓய்வில் செல்ல விரும்பிய 444 தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனே வழங்க வேண்டும்.

தற்போது அறிவித்துள்ள லே ஆப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்துக்கு செலுத்த வேண்டிய தொகைகளை அரசு செலுத்த வேண்டும்.

ஊதிய நிலுவைத் தொகை வழங்கும் வரை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அமுதசுரபி மூலம் தேவையான அரிசி, மளிகைப் பொருள்களை வழங்க வேண்டும்

- உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாநில திமுக அமைப்பாளர் டாக்டர் எம்ஏஎஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

தொ.மு.ச. மாநில துணைத் தலைவர் ஆ.ராசவேல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னாள் அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன், துணை அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், பொருளாளர் அனிபால் கென்னடி, கட்சி நிர்வாகிகள், தொ.மு.ச, ஆலை ஊழியர்கள், குடும்பத்தினர் நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.