நாகை தாலூகா மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்: 8 கிராமங்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்
நாகை மீனவர்களின் மீதான இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென நாகை தாலூகா மீனவப்
நாகை மீனவர்களின் மீதான இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென நாகை தாலூகா மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீர்மானிக்கப்பட்டது.
நாகையிலிருந்து 32 படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 230-க்கும் அதிகமானோரை இலங்கைக் கடற்படையினர் கடந்த 11-ம் தேதி கைது செய்தனர். இதில், 110 மீனவர்களையும், 15 படகுகளையும் சிறைப்பிடித்து திரிகோணமலைக்குக் கொண்டுச் சென்ற இலங்கைக் கடற்படையினர், 17 படகுகளையும் அதிலிருந்த மீனவர்களையும் உடனடியாக விடுவித்தனர்.
இலங்கை திரிகோணமலைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை திரிகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், நாகை மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாகை அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் கடந்த 5 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராமங்களின் மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், நாகை அக்கரைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, கல்லாறு உள்பட நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, நாகை மீனவர்கள் விடுதலையாகும் வரை 8 கிராம விசைப் படகு மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. மத்திய, மாநில அமைச்சர்களைச் சந்தித்துக் கோரிக்கையை வலியுறுத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.