முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுராந்தகம்  அருகே  அரசு அனுமதி பெறாத  கல்குவாரிகள்: பொதுமக்கள் அவதி

மதுராந்தகம்  அருகே  நல்லாமூரில் அரசு அனுமதி பெறாத   கல்குவாரிகளால், அங்கு வாழுகின்ற    பொதுமக்கள்  பெரும் அவதிக்கு, உள்ளாகிற  அவலமான நிலை   ஏற்பட்டுள்ளது. இதைப்

Updated On : 18 டிசம்பர், 2013 at 3:45 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:49 AM

மதுராந்தகம்  அருகே  நல்லாமூரில் அரசு அனுமதி பெறாத   கல்குவாரிகளால், அங்கு வாழுகின்ற    பொதுமக்கள்  பெரும் அவதிக்கு, உள்ளாகிற  அவலமான நிலை   ஏற்பட்டுள்ளது. இதைப் போக்க  மாவட்ட நிர்வாகம்  உதவவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் ஊராட்சிக்கு  உட்பட்ட ஊராட்சியாக நல்லாமூர் ஊராட்சி உள்ளது.  இதன் தலைவராக பொன்சிங்காரம்  பணியாற்றி வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு நிலமான 224.0 ஹேக்டரில் அரசின் அனுமதியுடன் கல்குவாரி இயங்கி வருகிறது. இக்கல்குவாரி இயங்குவதற்கு கலகுவாரியின் அருகே 200 அடிக்கு மேற்பட்ட பகுதியில் வீடுகளோ, நிலத்தின் பம்ப்செட்களோ இருக்ககூடாது.  மக்களுக்கு தொல்லை தருகின்ற சத்தத்தை ஏற்படுத்தாமல் குவாரிகளின் பணி இருக்கவேண்டும் போன்ற பல விதிமுறைகள்  உள்ளன. இந்த விதிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கு கல்குவாரிகளை  இயக்க காஞ்சிபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அனுமதி அளித்து வருகிறது.

நல்லாமூரில்  இயங்கி வருகின்ற கல்குவாரியை ஆந்திராமாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமோகன்ராவ் என்பவரின் பெயரில்  இயங்கி வருகிறது.   இக்கல்குவாரியில்  சுமார் 100 அடி அழத்துக்கு கனரக இயந்திரங்களின் துணையால் ஜல்லி கற்களை வெட்டி எடுத்த வந்துள்ளனர்.நல்லாமூரில்  அரசு வழங்கியுள்ள இடத்தை மீறி, மற்றொரு அரசு புறம்போக்கு பகுதியிலும் நல்லாமூரின் ஊராட்சிக்கு அருகில் உள்ள சரவம்பாக்கம் ஊராட்சி பகுதியில்  உள்ள புறம்போக்கு பகுதியிலும்  அரசுவிதிகளை மீறி  முந்தைய திமுக அரசில் முக்கிய பொறுப்பில்  உள்ளவர் மற்றும் ஒன்றிய செயலாளர்  ஆகியோர்களின் துணைக்கொண்டு அனுமதியின்றி கல்குவாரிகளை கிருஷ்ணமோகன்ராவ் இயக்கி  சுமார் 5 கோடிகளுக்கு மேல்  சம்பாதித்துள்ளார்.

Advertisement

சக்திவாய்ந்த வெடிகளை வைத்து கல்குவாரியில்  கற்கள்  வெட்டி எடுக்கப்படுகிறது.  இரவு நேரத்தில் இங்கு வெடிக்கப்படுகிற வெடி சத்தததாலும்,  கற்களை எடுத்துச்செல்கிற லாரிகளின் சத்தத்தாலும்  அப்பகுதி மக்கள் தூங்க முடியாமலும், சிறுகுழந்தைகள் பயத்தில் அலறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  இங்கு பெரும்பாலான மக்கள் குடிசைகளில் வசிப்பதால் அந்த வீடுகளில்  விரிசிசலும்  ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழலாம்  என்ற  பயந்த நிலையில்  உள்ளனர்.

கல்குவாரிக்கு அருகே  சுமார்  20 இருளர்கள்  வசித்து வருகின்றனர்.  அவர்களுக்கு ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம்  அனைத்து அடிப்படை  வசதிகளை  செய்துள்ளது.  மதுராந்தகம் வருவாய்துறை மூலம்  பட்டா வழங்க  ஏற்பாடாகியுள்ளது.சுமார் 100 அடி ஆழத்தில் கற்பாறைகளை வெட்டி   எடுப்பதால், இங்கு நீர்மட்டம் நாளுக்கு நாள்  குறைந்துக்கொண்டே  வருகிறது. 

இதனால்  இப்பகுதியில் விவசாயம் செய்ய போதுமான நீர் வசதி இல்லாமலும், குடிக்கத் தேவையான நீர்  கிடைக்காமலும், மக்கள் பெரிதும்  அவதிபடுகின்ற  நிலையில் துன்பப்படுகின்றனர்.கடந்த 10 ஆண்டுகாலமாக நல்லாமூர்  ஊராட்சிக்கு கிருஷ்ணமோகனராவ் தொழில் வரியை செலுத்தாமல்  இருந்து வந்துள்ளார்.   அவருக்கு பலமுறை ஊராட்சிமன்றம்  சார்பாக நேரிலும், கடிதம் வாயிலாக தொழில்வரியை  செலுத்தக்கோரி நினைவூட்டப்பட்டது.  இருந்தபோதிலும்  அவர் அத்தொழில் வரியை  செலுத்தாமல்  ஊராட்சி  நிர்வாகத்தை  ஏமாற்றி வந்துள்ளார்.

எந்த ஒரு ஊராட்சிக்கும் அப்பகுதி மக்கள் செலுத்துகிற   வீட்டு வரியும்,  தொழில்களை செய்கின்றவர்கள் செலுத்துகின்ற  தொழில்வரியும்  அப்பகுதியை  மேம்படுத்த  உதவிபுரிகின்றன். ஆனால் இந்த ஊராட்சியில்  மக்கள் செலுத்துகின்ற  வீட்டுவரியைக் கொண்டு  எந்தவித வளர்ச்சியையும்  அந்த ஊராட்சிமன்றத்தலைவரால்  செய்யமுடியவில்லை.

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரின்  அறிவுறுத்தலின்படி, நடைபெறுகின்ற நல்லாமூர்  ஊராட்சியில் கிராம சபை கூட்டங்களில்,  கிருஷ்ணமோகனராவ்  தொழில் வரியை செலுத்தாத  இக்கல்குவாரியை மாவட்ட நிர்வாகம்  தடை செய்யவேண்டும் என  பலமுறை  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பட்டுள்ளன. 

மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை  எடுக்காவிட்டால  அப்பகுதி மக்கள்  மிக விரைவில்  அரசின்  கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலைமறியல்   செய்ய திட்டமிட்டுள்ளாக தெரிய வருகிறது.தன் பெயரில் இருந்தால் தான் பிரச்சினை.  அதனால்  தனது பினாமியாக  தாம்பரத்தை சேர்ந்த  நபரின் மூலம்  உள்குத்தகையாக  தற்சமயம்  நடத்தி வருகிறார்.

நல்லாமூர் ஊராட்சி  பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும்,  பலவிதங்களில் தொல்லைகளை அளித்து,  அரசின் அனுமதிக்கு மீறி  செயல்படுகின்ற  இக்கல்குவாரியை  தடை செயய்ய மாவட்ட நிர்வாகம்  உதவவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.