கடலூரில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு :கடலுக்குள் கால் நனைத்து மக்கள் கண்ணீர் அஞ்சலி
கடலூரில் சுனாமி 9-ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. உறவுகளை இழந்தோர் கடலுக்குள் கால் நனைத்து கண்ணீர் அஞ்சலி
கடலூரில் சுனாமி 9-ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. உறவுகளை இழந்தோர் கடலுக்குள் கால் நனைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதில் கடலூர் மாவட்டத்தில் 617 பேர் இறந்தனர். 40 பேரைக் காணவில்லை. கடலூர் சில்வர் பீச் கடற்கரையில் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் சிலரும் ஆழிப் பேரலைக்குப் பலியாயினர்.
மீனவர்கள், மீன்பிடித் தொழில் தொடர்புடைய ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். வீடுகள் உடைந்து சேதம் அடைந்தன. படகுகள் வலைகள் காணாமல் போயின.
Advertisement
கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத் தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, முடசலோடை, எம்ஜிஆர் திட்டு உள்ளிட்ட 45 மீனவர் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. கடலூர் நகரப் பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் 3 கி.மீ தூரம் வரை கடல் நீர் புகுந்தது.
இந்த நாளை நினைவு கூறும் வகையில், உறவுகளை இழந்தோர், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடலூர் தேவனாம்பட்டணத்தில் அஞ்சலி செலுத்தினர். சுனாமி சோகத்தை அனுசரிக்கும் வகையில் மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை. பல படகுகளில் மீனவர்கள் கறுப்பு கொடியேற்றி வைத்திருந்தனர்.