அனுமதியின்றி ஜெலட்டின், டெட்டனேட்டர் வெடிப்பொருட்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது
திண்டுக்கல் மாவட்டக் குற்றப்பிரிவு டிஎஸ்பி., விஜயபாஸ்கர் தலைமையில் புளூஸ்டார்-எக்ஸ்ரே குழு சனிக்கிழமை பழனி சுற்றுப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது சத்திரப்பட்டி அருகே
பழனி அருகே அரசு அனுமதியின்றி ஜெலட்டின், டெட்டனேட்டர் போன்ற வெடிப்பொருட்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டக் குற்றப்பிரிவு டிஎஸ்பி., விஜயபாஸ்கர் தலைமையில் புளூஸ்டார்-எக்ஸ்ரே குழு சனிக்கிழமை பழனி சுற்றுப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது சத்திரப்பட்டி அருகே தாசரிபட்டி பாறைத்தோட்டம் பகுதியில் உள்ள மலர்புளூ மெட்டல்ஸ் குவாரி அருகே மூன்று பேர் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் ஏராளமான பெட்டிகளும் இருந்துள்ளது.
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் பெருமானூரை சேர்ந்த சின்னமுத்து மகன் சாமி(37), அண்ணாமலை மகன் பழனிச்சாமி(26), ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரை சேர்ந்த கருப்பணகவுண்டர் மகன் குப்புச்சாமி(34) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த பெட்டியில் ஏபிஈடி என்ற பெயர் பொறிக்கப்பட்ட கவரில் 532 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், சன்90 என்ற பெயர் பொறிக்கப்பட்ட கவரில் 9 ஜெலட்டின் குச்சிகள், போரஸ் பிரில்ஸ் என்ற வெள்ளை நிற பையில் 25கிலோ எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டும், மூன்று மூட்டை மற்றும் மற்ற பைகளில் தலா 10 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டும் என மொத்தம் 85 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார் தாசரி பட்டி கிராம நிர்வாக அலுவலர் சந்தியா, தண்டல் காளியப்பன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு அரசு அனுமதி இன்றி வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் மூன்று பேரில் குப்புச்சாமியிடம் இந்த பொருட்களை சாமி, பழனிச்சாமி ஆகியோர் த.புதுக்கோட்டையை சேர்ந்த தங்கவேல் கவுண்டர் மகன் செந்தில் என்பவருக்காக வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வத்தலக்குண்டு சார்பு ஆய்வாளர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாமி, பழனிச்சாமி, குப்புச்சாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.