நெல்லையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகை, தள்ளுமுள்ளு
கவிலைப்படி உயர்வு, சீருடை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தை சிஐடியூத் தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கவிலைப்படி உயர்வு, சீருடை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தை சிஐடியூத் தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு ஜனவரியில் 8 சதவிகிதமும், ஜூலை மாதம் 10 சதவிகிதமும் அகவிலைப்படி உயர்வு அறிவித்தது. எனினும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முறையாக வழங்கவில்லை. மேலும் 2013 ம் ஆண்டுக்கான சீருடை வழங்கவில்லை.
அரசு அறிவித்த அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் சீருடை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் திருநெல்வேலி வண்ணார்பேட்டை போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக முன்பு திரண்ட தொழிலாளர்கள் நிர்வாக இயக்குநர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணை பொதுச்செயலர் ஜி. வேல்சாமி, பொதுச்செயலர் கே. ஆறுமுகநயினார், திருநெல்வேலி மண்டல பொதுச்செயலர் எஸ். பெருமாள், மண்டலத் தலைவர் எஸ். வின்சென்ட், நாகர்கோவில் மண்டல பொதுச்செயலர் எம். லட்சுமணன், நிர்வாகிகள் பி. முத்துகிருஷ்ணன், டி. காமராஜ், கே. ஜோதி, எம். மரியஜான்ரோஸ், டி. ஹரிகுமார், சி. மணி உள்பட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாக ஒரு மாத நிலுவைத் தொகையும், பிப்ரவரி மாத இறுதிக்குள் எஞ்சியுள்ள நிலுவைத் தொகை வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.