முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் கோயிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மூவரிடம் செயின் பறிப்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சுற்றுலா வந்து தனியார் மண்டபத்தில் தங்கியிருந்த ஆதிபராசக்தி மன்றத்தினர் மூன்று பெண்களிடம் ஐந்தரை பவுன் மதிப்பிலான மூன்று செயின்கள் பறிக்கப்பட்டன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சுற்றுலா வந்து தனியார் மண்டபத்தில் தங்கியிருந்த ஆதிபராசக்தி மன்றத்தினர் மூன்று பெண்களிடம் ஐந்தரை பவுன் மதிப்பிலான மூன்று செயின்கள் பறிக்கப்பட்டன. மேலும் 6 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.3500 திருடுபோனது.

நாமக்கல் மாவட்டம் பனிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த 6 ஆண்கள் மற்றும் 54 பெண்கள் தனியார் பேருந்து மூலம் மேலமருவத்தூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் திங்கள்கிழமை இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்து கமலீஸ்வரன்கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரவு தங்கியுள்ளனர்.

அப்போது நள்ளிரவு மர்மநபர்கள் மண்டபத்திற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கீதா என்ற பெண்ணிடம் இரண்டரை பவுன் செயினையும், ஜமுனா என்ற பெண்ணிடம் 2 பவுன் செயினையும், உமா என்ற பெண்ணிடம் 1 பவுன் செயினையும் பறித்துள்ளனர். மேலும் 6 செல்போன்கள், ரொக்கம் ரூ.3500 திருடிக்கொண்டு மர்மநபர்கள் தலைமறைவாயினர்.

இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் தனியார் திருமண மண்டப மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.