குமரி மீனவர் மாயம்: கர்நாடகாவில் கடலோர காவல்படை தீவிர தேடுதல்
கேரளத்திலிருந்து கர்நாடகா மாநிலப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட
கேரளத்திலிருந்து கர்நாடகா மாநிலப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை பகுதியைச் சேர்ந்தவர் செ. ஜான் (55). இவருக்குச் சொந்தமான ஷைஜிமோள் என்ற விசைப் படகில் ஜான், அவரது மகன் சுரேஷ் (30), அதே பகுதியைச் சேர்ந்த சூ.பெல்கிஸ் (60), சி. வர்க்கீஸ் (50), கெ. ஷெல்டன் (21), அ. கிறிஸ்டோபன்பிள்ளை (60), நீரோடி தி. இக்னேசியஸ் (28), ஜெ. பாபுராஜ் (25), பு. பினு (18), கொல்லங்கோடு ம. ஜோசப் (56), மார்த்தாண்டன்துறை லூ. சிலுவைபிள்ளை ஆகிய 11 மீனவர்கள் பிப். 1-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். பிப். 2-ம் தேதி அதிகாலையில் கர்நாடக மாநிலம் மலப்பா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்த சுரேஷை காணவில்லையாம்.
இதைத் தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ப. ஜஸ்டின் ஆன்டனி மூலம் மாவட்ட ஆட்சியருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து, கடலில் காணாமல் போன மீனவர் சுரேஷை தேடும் பணி கடலோர காவல்படை ஹெலிகார்டர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள் மூலம் தற்போது கர்நாடக, மகாராஷ்டிர, கோவா மாநில கடல் பகுதிகளில் நடைபெற்று வருகிறது என ஜஸ்டின் ஆன்டனி தெரிவித்துள்ளார்.