விடுதியில் மாணவர் தற்கொலை: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
கோயமுத்தூரில் பிஎஸ்ஜி கல்லூரி விடுதியில் இளங்கோ என்ற மைக்ரோ பயாலஜி முதலாண்டு பயிலும் மாணவர் ஒருவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர், ஈரோட்டைச் சேர்ந்த மாணவர்.
கோயமுத்தூரில் பிஎஸ்ஜி கல்லூரி விடுதியில் இளங்கோ என்ற மைக்ரோ பயாலஜி முதலாண்டு பயிலும் மாணவர் ஒருவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர், ஈரோட்டைச் சேர்ந்த மாணவர்.
இந்த மாணவரின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த விடுதி வார்டன்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், உயிரிழந்த மாணவர் மிகவும் கஷ்டங்களுக்கு இடையே படித்து வந்தார் என்றும், அவருடைய தந்தையார் உயிரோடு இல்லாத நிலையில், அவரது வீட்டுக்கு குறிப்பிட்ட நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், முதல் தகவல் அறிக்கையில், குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும், அதனை முறையாக மாற்றி, சரியான காரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, டிஎஸ்பி வண்டியின் மீது மாணவர் கூட்டத்தில் இருந்து ஒருவர் கல்லெடுத்து வீசியுள்ளார். இதனால் போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர். தடியடியின் போது ஒரு மாணவர் காயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இது வரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும், போலீஸார் கல்லூரிக்குள் வந்தது தவறு என்று பேராசிரியர்கள் கூறினர். இது தொடர்பாக அவர்கள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.