தூத்துக்குடியில் தீ விபத்தில் 46 குடிசைகள் எரிந்து சேதம்
தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவன்நாயர் காலனியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து
தூத்துக்குடியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 46 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவன்நாயர் காலனியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் குடிசைப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.கடற்கரையோர பகுதி என்பதால் அங்கு காற்றின் வேகம் காரணமாக தீ மளமள என அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்ட்டது.
தூத்துக்குடி, சிப்காட், தெர்மல்நகர் ஆகிய இடங்களிலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இருப்பினும், ஏறத்தாழ 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.இருப்பினும், தீவிபத்தில் 46 குடிசை வீடுகள் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து காரணமாக வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு உடனடியாக நிரவாண உதவி வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.
வருவாய் கோட்டாட்சியர் க. லதா, வட்டாட்சியர் ஆழ்வாரம்மாள், மண்டல வட்டாட்சியர் சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து வடபாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.