புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சாவு
சிதம்பரம் புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த இருவர் இறந்தனர்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த இருவர் இறந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குத்தூஸ் (70). இவர் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை குடியாத்தத்தில் இருந்து காரில் சிதம்பரம் வழியாக நாகூர் சென்றனர். அப்போது குத்தூஸ் மகன் கரீம் ஓட்டிச் சென்றார். கார் பி.முட்லூர்-வண்டிகேட் புறவழிச்சாலையில் சென்ற போது குறுக்கே வந்த இளைஞர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்ட போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பளளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் குத்தூஸ், கரீம், காரில் பயணம் செய்த காதர்பீவி, பெளஜியா, தாவூத்தஸ்தகீர் மற்றும் சாலையில் நடந்து சென்ற கீரப்பாளையத்தைச் சேர்ந்த வீரமணி ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேரும் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குத்தூஸ் மற்றும் கீரப்பாளையத்தைச் சேர்ந்த வீரமணி ஆகிய இருவரும் சனிக்கிழமை இறந்தனர். மேலும் 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.