அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இடையே மோதல்: 7 பேர் காயம்
இதில் ஆசிரியர் நல சங்கத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகளிடையே திங்கள்கிழமை துணைவேந்தர் விடுதியில் தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இதில் ஆசிரியர் நல சங்கத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை துணைவேந்தர் எம்.ராமநாதனை சந்திக்க சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் துணைவேந்தரை தன்னிச்சையாக ஏன் சந்திக்க சென்றீர்கள் என கேட்டதாகவும், அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலில் முடிந்தது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் நலசங்க தலைவர் சிவகுருநாதன், பொதுச்செயலாளர் சிங்காரவேலன், செயலாளர் செங்கல்வராயன், நிர்வாகிகள் ஜெயபாரதி, தனசேகரன், சிவக்குமார், ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.