அரசு நிலத்தை மோசடி மூலம் விற்பனை செய்ததாககிராம நிர்வாக அலுவலர் உள்பட 4 பேர் கைது
சிவகங்கை அருகே அரசுக்குச் சொந்தமான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்தது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர்.
சிவகங்கை அருகே அரசுக்குச் சொந்தமான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்தது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், உடையனேந்தல் அருகே உள்ளது பில்லத்தி கிராமம். இங்கு அரசுக்கு சொந்தமாக உள்ள 140 ஏக்கர் நிலத்தை இப்பகுதியைச் சேர்ந்த மாசானம், வெள்ளைச்சாமி, சுப்பு உள்பட 8 பேர் சேர்ந்து போலியாக ஆவணம் தயாரித்து கடந்த 2.2.10 அன்று அங்குச்சாமி என்பவருக்கு பவர் மாற்றம் செய்தனராம். இது குறித்து கடந்த 16.5.12 அன்று அப்போதைய வட்டாட்சியர் முருகானந்தம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்திருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திட மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்குச்சாமி உள்பட 9 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்து விசாரணை நடத்திட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் திருமால் அழகு என்பவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், பவுல் ஏசுதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
Advertisement
இந்த வழக்கு தொடர்பாக சாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டி(57), நில அளவை டிராப்ட்மேன் பூமிநாதன்(33) மற்றும் விவசாயிகளான மலைராஜ்(47), தீபாவளி(34) ஆகிய நான்கு பேரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்து, சிவகங்கை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வெங்கடேஷ்குமார் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 4 பேரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.