இலங்கை பிரச்னை: விருதுநகர் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்
விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இலங்கை பிரச்னையை முன்னிட்டு உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இலங்கை பிரச்னையை முன்னிட்டு உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு காவல் சரகத்தைச் சேர்ந்த கெப்பிலிங்கம்பட்டி கிராமத்தில் பொதுத் திடலில் இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கிராமத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் 15 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் கிராமத்தில் சமுதாயக் கூடம் முன்பு தலைவர் நேரு தலைமையில் அக்கிராமத்தினர் 90 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
Advertisement
ஆலங்குளம் அருகே கண்டியாபுரம் இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் தலைவர் அந்தோனிசாமி தலைமையில் 360 பெண்கள் உள்ளிட்ட 820 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல், சிவகாசியில் தேவர் சிலை அருகில் லயன்ஸ் ஜிம் நண்பர்கள் மன்றத்தின் தலைவர் சிங்கராஜ் தலைமையில் 40 பேரும், ஜாலி நண்பர்கள் மன்றத்தின் தலைவர் தீபன்சக்கரவர்த்தி தலைமையில் 20 பேரும், சிவகாசி நகர் பகுதியில் உள்ள சாட்சியபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் நகரச்செயலாளர் பிரபாகரன் தலைமையில் 10 பேரும் என மொத்தம் 525 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டம்: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் அதன் ஒன்றியச் செயலாளர் டி.முகிலன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், விருதுநகரில் ரயில் நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் என மொத்தம் 27 பேரை கைது செய்தனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: மேலும், இலங்கை அதிபர் ராஜபட்ச மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகளை கண்டித்து ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரி மாணவர்கள் சார்பில் செல்வக்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 15 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கலசலிங்கம் தொழிற் பயிற்சி பள்ளி மாணவர்கள் சார்பில் மாரிமுத்து தலைமையில் ராஜாபாளையம் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 35 பேரும் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாணவர்கள் அப்பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 25 பேரும், அருப்புக்கோட்டையில் அனைத்து கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் புதுப்பேரு்நது நிலையம் முன்பு மாரிமுத்து தலைமையில் 20 பேரும், கிருஷ்ணன்கோயில் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு மாணவர்கள் வினோத்குமார் தலைமையில் 35 பேர் முக்குச்சாலை பகுதியிலும், விருதுநகரில் தமிழ் ஈழ மாணவர் அமைப்பு சார்பில் ஸ்டேட் பேங்க் முன்பு 112 பேரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.