சிதம்பரம் அருகே கடலில் குளித்த மாணவர் சுழலில் சிக்கி மாயம்
சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கடலில் குளித்த மாணவர் ஒருவர் சுழலில் சிக்கி மாயமானார். அவரை தீயணைப்பு மீட்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கடலில் குளித்த மாணவர் ஒருவர் சுழலில் சிக்கி மாயமானார். அவரை தீயணைப்பு மீட்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி தானாரபேட்டையைச் சேர்ந்தவர் ஜீவா மகன்கள் ராம்குமார் (17), ராமமூர்த்தி (16). இருவரும் தீபாவளிப் பண்டிகைக்காக சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு வந்துள்ளனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று ராம்குமார் தம்பி ராமமூர்த்தியிடம் உடைகளை கழற்றி கொடுத்துவிட்டு கடலில் குளித்துள்ளார். அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த ராம்குமாரை காணவில்லை. நீண்ட நேரமாகியும் ராம்குமார் கரைக்கு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த தம்பி ராமமூர்த்தி அங்குள்ள மீனவர்களிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து மீனவர்கள் போலீஸாருக்கு, தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். புதுசத்திரம் போலீஸார் மற்றும் பரங்கிப்பேட்டை தீயணைப்பு மீட்புத்துறையினரும் விரைந்து சென்று ராம்குமாரை தேடி வருகின்றனர். மாணவர் ராம்குமார் கடலில் குளித்த போது சுழலில் சிக்கி நீரில் மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement