கடலூர் ஆட்சியருக்கு வந்த போலி ஆவணத்தின் பேரில் பெட்ரோல் பங்க் சீல்
கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு வந்த போலி ஆவணத்தின் பேரில் சிதம்பரம் அருகே பெட்ரோல்பங்க் ஒன்று சீல் வைக்கப்பட்டது. பின்னர் அது போலி ஆவணம் என தெரியவந்ததை அடுத்து சீல் விலக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு வந்த போலி ஆவணத்தின் பேரில் சிதம்பரம் அருகே பெட்ரோல்பங்க் ஒன்று சீல் வைக்கப்பட்டது. பின்னர் அது போலி ஆவணம் என தெரியவந்ததை அடுத்து சீல் விலக்கப்பட்டது. போலி ஆவணம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டக்கு, ஆட்சியர் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அகரம் பகுதியில் ரயில்வேகேட் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமாருக்கு பசுமை தீர்ப்பாயத்திலிருந்து மேற்கண்ட பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்குமாறு ஃபேக்ஸ் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் மூலம் மேற்கண்ட பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் புதுதில்லி பசுமை தீர்ப்பாயத்திற்கு தொடர்பு கொண்டும், இணையதளம் மூலம் விபரங்களை கேட்டபோது, அதுபோன்று எந்த உத்தரவும் பசுமை தீர்ப்பாயம் வழங்கவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தெரிவித்த போதுதான், ஆட்சியருக்கு வந்தது போலீயான ஆவணம் என தெரியவந்தது. இதனையடுத்து பெட்ரோல் பங்கிற்கு வைக்கப்பட்ட சீல் விலக்கி கொள்ளப்பட்டது. மேலும் தனக்கு போலி ஆவணம் அளித்தவர் யார் என கண்டுபிடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகாவிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.