சிதம்பரம் ஸ்ரீமெய்கண்டதேவர் கோயில் குடமுழுக்கு: 3 மடாதிபதிகள் பங்கேற்பு
சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்ட தேவநாயனார் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (நவ.14-ம் தேதி) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. 3 மடாதிபதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.
சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்ட தேவநாயனார் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (நவ.14-ம் தேதி) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. 3 மடாதிபதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.
கும்பாபிஷேகத்திற்கு திருவாவடுதுறை ஆதீன 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் தலைமை வகித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மெளன மடாதிபதி மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று அருளாசி வழங்கினர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவ.13-ம் தேதி புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை யாகசாலை இரண்டாம்கால பூஜையும், மகாபூர்ணாஹூதியும் நடைபெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து மடாதிபதிகள் முன்னிலையில் கடம் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்து விமானத்தின் மீதுள்ள கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் மகாதீபாராதனையும், ஸ்ரீமெய்கண்டதேவநாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன பொதுமேலாளர் மகாலிங்கம், சுப்பையாபிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன வைத்தியநாத தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் கிளை ஆய்வாளர் ந.செந்தில்குமார், இந்து ஆலய பாதுகாப்புக்குழு செயலாளர் ஜோதி.குருவாயூரப்பன், சந்திர.பாலசுப்பிரமணிய தேசிகர், கயிலை முத்துகணேசன் உள்ளிட்டோர் செய்தனர்.
பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் பொதுதீட்சிதர்கள் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.