வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
நாகை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலரின் செயல்பாட்டைக் கண்டித்தும் முடக்கப்பட்ட தில்லையாடி ஊராட்சி நிதி கணக்கை விடுவிக்க வலியுறுத்தியும் தில்லையாடி தியாகி
நாகை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலரின் செயல்பாட்டைக் கண்டித்தும் முடக்கப்பட்ட தில்லையாடி ஊராட்சி நிதி கணக்கை விடுவிக்க வலியுறுத்தியும் தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் எதிரில் திங்கள்கிழமை கொட்டும் மழையில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:
செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலரின் கடந்த செப்டெம்பர் மாதம் 13ந்தேதியிட்ட கடிதத்தில், நிர்வாக காரணங்களால் தில்லையாடி ஊராட்சியின் வங்கி கணக்கு முடக்கப்படுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை தொகையை விடுவிக்கக் கூடாது என வங்கிக்கும்,ஊராட்சிக்கும் அறிவித்து கடிதம் அனுப்பபட்டுள்ளது.எந்தவித முன்னறிவிப்பும் விசாரணையும் இல்லாமல் குறிப்பிடத்தக்க காரணங்கள் எதுவுமே குறிப்பிடாமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாம்.
Advertisement
ஊராட்சி நிதி கணக்கை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி ஊராட்சி கூட்டம் மற்றும் கிராமசபை கூட்ட தீர்மானங்கள் வாயிலாகவும்,ஊராட்சி உறுபினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று வலியுறுத்தியும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் 2 மாதங்களாக எடுக்கப்படவில்லையாம்.உரிய காரணமும் தெரிவிக்கப்படவில்லையாம்.
இதனால் ஊராட்சியில் மின் விளக்கு,குடி நீர் பராமரிப்பு,மழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்கள் பிரதிநிதிகள் செயல்பட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலரின் செயல்பாட்டைக் கண்டிப்பதோடு ஊராட்சி நிதி கணக்கை நிறுத்தி வைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்து நிர்வாகம் செயல்பட வழி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தரங்கம்பாடி வட்டடாட்சியர் அழகர்சாமி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரிடையாக வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் நாகை மாவட்ட உதவி இயக்குனர் (கிராம பஞ்சாயத்துகள்)) பழனிவேல்,வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) லதா ஆகியோர் பிற்பகலில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஊராட்சி உறுப்பினர்கள்,பெண்கள் உள்பட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.