சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை கடத்த முயற்சி: 5 பேர் பணியிடை நீக்கம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து எவ்வித நடைமுறையும் பின்பற்றப்படாமல் அனுமதியின்றி லாரியில் ஒரு லோடு சர்க்கரை கடத்த முயற்சித்தது குறித்து 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து எவ்வித நடைமுறையும் பின்பற்றப்படாமல் அனுமதியின்றி லாரியில் ஒரு லோடு சர்க்கரை கடத்த முயற்சித்தது குறித்து 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரைக்கு உண்டான பணத்திற்கு பணம் கட்டி இன்வாய்ஸ் பெற்ற பின்னர் அவுட் பாஸ் வழங்கப்பட்டு லாரியில் சர்க்கரை ஏற்றி ஆலையிலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை அலுவலக மேலாளர் வாய்மொழி உத்தரவின் பேரில் எவ்வித அனுமதி சீட்டும் இன்றி ஒரு லோடு சர்க்கரை ஏற்றிக் கொண்டு லாரி (TN 45 AT 6669) ஒன்று ஆலையை விட்டு வெளியே வந்தபோது ஆலைக் காவலாளி தடுத்து நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நலச் சங்க செயலாளர் சிட்டிபாபு லாரியை நிறுத்தி விசாரித்த போது எவ்வித நடைமுறையும் பின்பற்றப்படாமல், எவ்வித ஆவணமும் இல்லாமல் ஒரு லோடு சர்க்கரை ஏற்றி வந்தது தெரியவந்து லாரியை பிடித்து நிறுத்தியுள்ளார். பின்னர் இதுகுறித்து ஆலை ஆட்சியரிடமும், சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன் பேரில் சேத்தியாத்தோப்பு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
5 பேர் பணியிடை நீக்கம்: லாரியில் சர்க்கரை கடத்த முயற்சித்தது குறித்து ஆலை கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் சிட்டிபாபு ஆலை ஆட்சியர் நாகபூஷணராஜூவிடம் புகார் அளித்தார். அதன் பேரில் 27-11-2013 அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பக்கழகம், நாகப்பட்டினம் கோட்டத்திற்கு 290 குவிண்டால் சர்க்கரை மூட்டைகளை அலுவலக நடைமுறை பின்பற்றாமல் லாரியில் ஏற்றிவிட காரணமாக இருந்த அலுவலக மேலாளர் (பொறுப்பு) பி.ராமசாமி, சர்க்கரை கிடங்கு எழுத்தர் கே.இளங்கோவன், எடைத்தள எழுத்தர் ஆர்.வசந்தராஜன், பாதுகாவலர் டி.நார்பகதூர், பாதுகாவலர் கே.சோயாகிரி ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் நாகபூஷணராஜூ உத்தரவிட்டுள்ளார்.